காரியசித்தியோ கர்த்தரால் வரும். (நீதி 16:33)
நாம், நம் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களுக்காக பிரயாசப்படுகிறோம். ஆவிக்குரிய காரியங்களிலும், உலகபிரகாரமான காரியங்களிலும் நமக்கு தேவைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் அதற்காக நாம் உழைக்கிறோம். ஆனால், வேதம் சொல்கிறது “காரியசித்தியோ கர்த்தரால் வரும்” என்று. ஆம் “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.” (நீதி 21:31). நாம் ஒருவேளை இந்த இந்த காரியம், இந்த இந்த வேளைகளில் இப்படியாக நடந்தால் நன்மையாக இருக்குமே என்று நினைக்கலாம். ஆனால் வேதம் கூறுகிறது “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” (பிர 3:1). மேலும் “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிர 3:11) என்றும் வேதம் தெளிவாக கூறுகிறது. ஆபிரகாம், யோசேப்பு, மோசே, தாவீது என்று பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு காலதிட்டத்தை அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த ஆண்டவர் வைத்திருந்தார்.
புதிய ஏற்பாட்டில் வேதம் சொல்கிறது “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.” (கலா 4:5) என்று. சவுலை பவுலாக்க தேவன் ஒரு நாளை வைத்திருந்தார். எனவே ஊழியக்காரியமானாலும், உலகபிரகாரமான வாழ்க்கையின் தேவைகள் எதுவானாலும் ஆண்டவர் நமக்கு தரும் நேரத்திலேயே அது கை கூடி வரும். அதுவரை நாம் பொறுமையாய் இருக்க வேண்டும். நம் சொந்த முயற்சியில், புத்தியில் அதை செய்யலாம் என்று நினைத்தாலோ அல்லது பொறுமையின்றி அந்த காரியத்தை விட்டுவிட்டாலோ நஷ்டம் நமக்குதான். எனவே கர்த்தருடைய நேரத்திற்கு காத்திருப்போம். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” (1 பேதுரு 5:6). ஆமென், அல்லேலூயா.

