கர்த்தரின் ஆசிர்வாதம்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி 10:22).

ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் மற்றும் பூமிக்குரிய நன்மைகள் யாவும் அவரால் நமக்கு கிடைக்கும் பலன்.   ஊழியங்கள், கனிகள், வரங்கள் என்பவற்றை தருபவர் அவரே.  பொன்னும், பொருளும் மட்டும் அல்ல, பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் என இவ்வுலகில் யாவற்றையும் நமக்கு தருபவர் அவரே.   இப்படிப்பட்ட ஆசிர்வாதங்களினால் நமக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மைகள் மற்றும் மகிழ்ச்சி உண்டாகிறது.   ஆனால் சிலர் மேற் கூறப்பட்ட நன்மைகளை ஆண்டவரின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, தங்கள் சுய புத்தியினால், பெலத்தினால், முயற்சியினால் அல்லது மற்ற மனிதர்களின் தயவினால் அவற்றை பெற முயற்சிக்கின்றனர்.   சிலர் பூமிக்குரிய பொன், பொருள்களை சம்பாதிக்கின்றனர்.  தமக்கு பிடித்தவரை மணக்கின்றனர்.   ஆனால் கர்த்தரால் தரபடாத இவை யாவற்றாலும் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் துன்பமே உண்டாகும், நீதி 28:20 கூறுகிறது “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” என்று.   எனவே ஆபிரகாமை போல (ஆதி 14:22,23) கர்த்தரால் வரும் நன்மைகளையே நாம் நாடி தேடுவோமாக.   அவர் நமக்கு தருபவற்றில் திருப்தியோடிருப்போம்.   நம் ஒவ்வொருவருடைய ஜெபமும் “என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” (நீதி 30:9) என்பதாக இருக்கட்டும்.   ஆமென், அல்லேலூயா.

சிந்தனை துளிகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதரிகள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.  சிந்தனை துளிகள் என்றும் இந்த புதிய தியானத் தொடரில், வேத வசனங்களின் மகத்துவங்களை, சொல்லும் செய்திகளை இரத்தின சுருக்கமாக தியானிக்க இருக்கிறோம்.

துளி 1:

உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள் (லூக்கா 12:33)

தேவன் நமக்கு இவ்வுலகத்தில் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள், பூமிக்குரிய நன்மைகள் யாவும், நமக்கு ஈவாக கொடுக்கப்பட்டவையே.  அப்படி ஈவாக கொடுக்கப்பட்டவைகளை நாம் பிறருக்கும் எந்தவித எதிர்பார்பும்மின்றி பகிர்ந்து கொடுக்கும் பொழுது, பரலோகத்தில் நமக்கு பொக்கிஷம் சேர்த்து வைக்கப்படுகிறது (லூக் 12:33).  பூமியிலும் தொடர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தும் தேவனால் அருளப்படுகிறது.  ஆதி அப்போஸ்தல காலத்தில் இதனையே அப்போஸ்தலர்கள் திருச்சபையில் கடைப்பிடித்தனர்.  ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை பகிர்ந்து கொடுத்தனர், பூமிக்குரிய நன்மைகளை பகிர்ந்து அனுபவித்தனர்.  பரலோகத்தில் தங்கள் பொக்கிஷத்தை சேர்த்து வைப்பதே மேன்மை என்று உணர்ந்தனர்.  இன்றும் இதை நாம் செய்வோமானால், பலவித ஆவிக்குரிய ஆசிர்வாதங்களையும், பூமிக்குரிய நன்மைகளையும் நாம் திருச்சபை மத்தியிலும், ஊழிய ஸ்தலங்களிலும் கொண்டுவர முடியும்.  தேவன் தாமே இதற்கு, தமது கிருபையை பாராட்டுவாராக.  ஆமென்.